செய்திகள்

பா.ஜ.க.வுக்கு எதிராக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியை மூத்த தலைவர் வழிநடத்துவார் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-11-21 06:19 GMT   |   Update On 2018-11-21 06:19 GMT
பா.ஜ.க.வுக்கு எதிராக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியை மூத்த தலைவர் வழிநடத்துவார் என்று ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #BJP #ChandrababuNaidu

நெல்லூர்:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் பிரதமர்? யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார்? என்பதில் குழப்ப நிலை நிலவி வருகிறது.

இது சம்பந்தமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த தெலுங்குதேச கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

இந்தியாவை பொறுத்த வரை 2 அணிகள்தான் இருக்கின்றன. அதில் ஒன்று பாரதிய ஜனதா அணி, மற்றொன்று பாரதிய ஜனதாவுக்கு எதிரான அணி.

 


இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கூட்டணியில் சேருவது அவசியமான ஒன்றாகும்.

எங்கள் கூட்டணியை மூத்த தலைவர் ஒருவர் வழிநடத்துவார். ஆந்திராவுக்கு யார் நன்மை செய்வாரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

பாராளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி அணிகள் கூடி பேசி முக்கிய முடிவுகள் எடுப்போம். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம்.

பிரதமர் மோடி வேண்டும் என்றே சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையினரை தெலுங்குதேசம் கட்சி தலைவர்களுக்கு எதிராக ஏவி விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார். #BJP #ChandrababuNaidu

Tags:    

Similar News