செய்திகள்

கர்நாடகத்தில் ஆன்-லைன் மூலம் மதுபானம் விற்க தடை: குமாரசாமி பேட்டி

Published On 2018-11-03 03:49 GMT   |   Update On 2018-11-03 03:49 GMT
கர்நாடகத்தில் ஆன்-லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக குமாரசாமி கூறினார். #kumaraswamy
பெங்களூரு :

பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆன்-லைனில் மதுபானம் விற்பனை செய்யும் முடிவு முந்தைய அரசால் எடுக்கப்பட்டது. இதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆன்-லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்ததாரருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல.

நான் சிவமொக்காவுக்கு சென்று வந்த பிறகு மதுபான விற்பனை அதிகரித்துவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நான் அங்கு சென்று வந்த பிறகு பா.ஜனதாவினருக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அதனால் மதுபான விற்பனை அதிகரித்திருக்கும். ராமநகரில் பா.ஜனதா வேட்பாளர் விலகியது கடவுளின் செயலாக இருக்கலாம்.

வேட்பாளரை விலை கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அங்கு பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும், வாக்காளர்கள் எங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வார்கள். கர்நாடக மேல்-சபைக்கு மொத்தம் 3 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். 2 நியமன உறுப்பினர்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நியமன உறுப்பினரை எங்கள் கட்சி சார்பில் நியமனம் செய்வோம்.



இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு பெரிய அளவில் விவசாயிகள் மாநாடு நடத்தப்படும். அதில் கடன் தள்ளுபடிக்கான கடிதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் ஒரு இனிப்பான செய்தியை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். அதற்கு தேவையான திட்டங்களை தயாரித்து வைத்துள்ளேன்.

மாநிலத்தில் உள்ள முக்கியமான அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் 10-க்கும் அதிகமான விபத்து சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி கேட்டு ஜனதா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் என்னிடம் மனு கொடுக்கிறார்கள்.

ஏழை மக்களுக்கு உதவ தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தனியார் பஸ்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy
Tags:    

Similar News