செய்திகள்

சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்

Published On 2018-10-26 06:01 GMT   |   Update On 2018-10-26 06:01 GMT
சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
புதுடெல்லி:

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.


அதன்படி இன்று நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார், முகமூடி அணிந்தும், கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பும் ஏராளமான காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #CongressProtests #AlokVerma #CBIVsCBI
Tags:    

Similar News