செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை - கர்நாடக மந்திரி சொல்கிறார்

Published On 2018-09-05 21:06 GMT   |   Update On 2018-09-05 21:06 GMT
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை என கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Mekedatu #MinisterShivakumar
புதுடெல்லி:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், டெல்லியில் இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.

நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது. இந்த விவகாரத்தில், தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Mekedatu #MinisterShivakumar
Tags:    

Similar News