செய்திகள்

கர்நாடகாவில் 2 மாநகராட்சிகளில் ஜே.டி.எஸ். கட்சி ஆதரவுடன் காங்கிரசுக்கு மேயர் பதவி

Published On 2018-09-04 09:54 GMT   |   Update On 2018-09-04 09:54 GMT
கர்நாடகாவில் மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது. #KarnatakaLocalBodyElections
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. இந்த மாநகராட்சியில் பாரதிய ஜனதா 23 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும், ஜே.டி.எஸ். 4 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கவுன்சிலர் மேயராக உள்ளார். சிவமொக்கா மாநகராட்சியான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது.

மைசூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா 22 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 19 இடங்களையும், ஜே.டி.எஸ். 18 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் பிடித்துள்ளன.

இந்த மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க 33 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கட்சிகள் 37 இடங்களை பிடித்துள்ளன. இதனால் இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டணியில் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ்- ஜே.டி.எஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மைசூரு மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதேபோல தும்கூரு மாநகராட்சியிலும் காங்கிரசை சேர்ந்தவர் மேயராகிறார். இந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 35 இடங்களில் பாரதிய ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 10 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த மாநகராட்சியில் தங்களுக்கு மேயர் பதவியை ஜே.டி.எஸ். விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். இதை ஜே.டி.எஸ். கட்சி ஏற்றுக்கொண்டது. #KarnatakaLocalBodyElections
Tags:    

Similar News