செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு காரணம் என்ன? - தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்

Published On 2018-08-16 10:55 GMT   |   Update On 2018-08-16 10:55 GMT
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI
சென்னை:

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதிலை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

அதில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. டிஜிபி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் வருவது இல்லை. சிலை கடத்தல் முறைகேடில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளதால், நியாமான விசாரணை நடக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்பந்தத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News