செய்திகள்

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு

Published On 2018-08-02 15:21 GMT   |   Update On 2018-08-02 15:21 GMT
கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. #KamalHaasan #Vishwaroopam2
சென்னை:

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. 

அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:    

Similar News