செய்திகள்

என்ஆர்சி விவகாரம் - திரிணாமுல் காங். அமளியால் மாநிலங்களவை மதியம் வரை ஒத்திவைப்பு

Published On 2018-07-31 07:19 GMT   |   Update On 2018-07-31 07:19 GMT
என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #RajyaSabhaAdjourned
புதுடெல்லி:

வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.



இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு விவகாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் எதிரொலித்தது. மாநிலங்களவை இன்று துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ஆர்சி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவை அலுவல்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு என்ஆர்சி விவகாரம் குறித்து பேச வேண்டும் என தலைவர் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளித்துவிட்டு, பின்னர் மாநிலங்களவையில் பேசுவார் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார். #AssamNRC #RajyaSabhaAdjourned
Tags:    

Similar News