செய்திகள்

காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? - பிரதமர் மோடி கேள்வி

Published On 2018-07-14 13:15 GMT   |   Update On 2018-07-14 13:15 GMT
முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இஸ்லாமியர்களை ஆதரிப்பதாக கூறும் காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். #PMmodi #CongressstandsforMuslim
லக்னோ:

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்களுக்கான கட்சி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என காங்கிரஸ் தலைவர் கூறியதாக நாளிதழ் செய்தியில் நான் படித்து தெரிந்துகொண்டேன்.
இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாக விவாதமும் நடந்து வருகின்றது. இயற்கை வளங்களின்மீது சொந்தம் கொண்டாட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னர் தெரிவித்து இருந்ததால் தற்போது  காங்கிரஸ் தலைவரின் கருத்தை அறிந்து நான் ஆச்சரியப்படவில்லை.

ஆனால், காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? என நான் கேட்க விரும்புகிறேன். அந்த கட்சியில் முஸ்லிம் பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கு ஏதும் இடமுள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் மசோதாவையும், பாராளுமன்றத்தையும் அவர்கள் முடக்கியது ஏன்? பாராளுமன்றம் இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் கூடவுள்ளது. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா விவகாரங்களால் பாதிக்கபட்டவர்களை சென்று சந்தியுங்கள். அதன் பின்னர் உங்கள் கண்ணோட்டத்தை பாராளுமன்றத்தில் பதிவு செய்யுங்கள் என நான் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு  அவர் கூறினார். #PMmodi #CongressstandsforMuslim 
Tags:    

Similar News