செய்திகள்
ஓவர் ஸ்பீடில் சென்ற கவர்னர் காருக்கு அபராதம் - காரில் தான் இல்லை என்றாலும் கட்ட உத்தரவு
கேரள கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் வேகமாக சென்றதற்காக மோட்டார் வாகன துறை அபராத நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சமரசமின்றி அபராதத்தை கட்ட அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கடந்த ஏப்ரல் மாதம் கேரள கவர்னர் சதாசிவம் பயணிக்கும் மெர்சீடிஸ் கார் ராஜ்பவன் அருகே வேகமாக சென்றுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காட்ட அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா, கவர்னரின் காரை புகைப்படம் எடுத்து மோட்டார் வாகன துறைக்கு அனுப்பியுள்ளது.
இதனை அடுத்து, வேகமாக சென்றதற்காக ரூ.400 அபராதம் கட்ட வேண்டும் என கவர்னர் மாளிகைக்கு மோட்டார் வாகன துறை நோட்டீஸ் அனுப்பியது. தான் காரில் இல்லை என்றாலும், கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் என்பதால், அந்த அபராதத்தை எவ்வித சமரசமும் இல்லாமல் கட்ட வேண்டும் என கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு இதுபோல மூன்றாயிரம் கார்கள் பிடிபடுவதாகவும், இதன்மூலம் மாதம் இரண்டு கோடி வரை அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன துறை தெரிவித்துள்ளது.