செய்திகள்
மும்பை ரெயில் நிலையத்தில் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட முயன்ற காவலர் சஸ்பெண்ட்
மும்பையில் ரெயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் ரெயில்வே காவலர் தகாதமுறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியானதால் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
மும்பை கல்யான் ரெயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் இன்று ஒரு பெண் தன்னுடன் வந்தவருடன் அமர்ந்திருந்தபோது, அருகாமையில் அமர்ந்திருந்த ரெயில்வே காவலர் ஒருவர் அந்தப் பெண்ணின் தோள்பட்டையில் கை வைப்பதை பார்த்த சிலர் இந்த அத்துமீறலை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதைகண்ட மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் அந்த காவலரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த காவலர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் சச்சின் பலோடே, இந்த சம்பவம் தொடர்பாக, அந்த காவலர் மீது புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.