செய்திகள்

பூரி ஜகநாதர் ஆலய கருவூல சாவிகள் மாயம் - நீதி விசாரணைக்கு ஒடிசா முதல்வர் உத்தரவு

Published On 2018-06-04 13:00 GMT   |   Update On 2018-06-04 13:00 GMT
பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஒடிசா முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #SriJagannathTemple #treasurykeysmissing #judicialprobe
புவனேஸ்வர்:

உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு, பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த கருவூல அறையின் சுவர், கூரை, தரை ஆகியவற்றின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 

நேபாள மன்னர் கஜபதி மஹாராஜ் டிப்யசிங்கா டெப்-பின் பிரதிநிதி, தொல்லியல் துறையை சேர்ந்த இரு பொறியாளர்கள், ஒடிசா ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோவில் அறங்காவல் துறை தலைமை நிர்வாகிகளை உள்ளடக்கிய பத்துபேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது, கருவூலத்தின் உள் அறையில் நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான சாவிகள் ஆலய நிர்வாகிகள் யாரிடமும் இல்லை என்றும் அந்த சாவிகள் காணாமல் போனதாகவும் தெரியவந்தது.

வரும் ஜூலை மாதம் 14-ம் தேதி பூரி ஜகநாதர் ஆலயத்தின் பிரசித்திபெற்ற ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆலயத்தின் கருவூலச் சாவிகள் மாயமான சம்பவம் ஒடிசா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மாநில அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். 

பூரி சங்கராச்சாரியர் நிஸ்ச்சலாநந்தா சரஸ்வதியும், மாநில அரசு இவ்விவகாரத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த ஆலயத்தின் கருவூலத்தில் உள்ள பொருட்கள் கடந்த 1984-ம் ஆண்டில் கடைசியாக கணக்கு பார்க்கப்பட்டு, பதிவும் செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும் மாவட்ட கலெக்டரிடம் கருவூலச் சாவிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் சாவிகள் காணாமல் போனது எப்படி? என்ற கேள்விக்கு அரசால் பதில் கூற இயலவில்லை.

இந்நிலையில், பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஒடிசா முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், இவ்விவகாரத்தில் பொதுமக்களின் கவனத்தை திடைதிருப்பவே நீதி விசாரணைக்கு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் பல நீதி விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இவற்றால் கிடைத்த பலன் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். #SriJagannathTemple #treasurykeysmissing #judicialprobe
Tags:    

Similar News