மூன்றாவது எண்ணெய் கப்பலையும் பறிமுதல் செய்த அமெரிக்க ராணுவம்
- வெனிசுலாவைச் சுற்றி அமெரிக்கா கடலில் தனது படைகளைக் குவித்துள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெனிசுலாவைச் சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து உள்ளது.
இதற்கிடையே, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர். அதன்பின், அந்தக் கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த எண்ணெய் கப்பல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஒரே வாரத்தில் பறிமுதல் செய்யப்படும் இது இரண்டாவது எண்ணெய் கப்பல் என்பதுடன், இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது சம்பவம் என தெரிய வந்துள்ளது.