செய்திகள்

ரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொன்ற பெண் கைது

Published On 2018-06-03 11:41 GMT   |   Update On 2018-06-03 11:41 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். #wifenkillsMan #Rs15crproperty
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் ஷங்கர் கைக்வாட் மாயமானதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இந்த கோணத்திலும் விசாரிக்க தொடங்கியபோது, ஆஷா கெய்க்வாட்டின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக தந்தார்.

கடந்த மே மாதம் 18-ம் தேதி கணவர் ஷங்கரை ஆட்டோ ரிக்‌ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். ஷங்கர் சுயநினைவை இழக்க தொடங்கியவுடன், ஹிமான்ஷு துபே மற்றும் அவருடன் வந்த 4 பேர் உதவியுடன் ஷங்கரை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொன்ற ஆஷா, அவரது உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கிவீசினார்.

பிறகு, ஒன்றும் தெரியாததுபோல் கல்யான் டவுன் ஷிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துசேர்ந்த ஆஷா, தனது கணவர் காணாமல் போனதாக போலி நாடகமாடியும் போலீசில் புகாரும் அளித்த உண்மைகளை, ஆஷாவின் கைபேசி அழைப்புகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைதொடர்ந்து, ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஹிமான்ஷு துபேவின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். #wifenkillsMan #Rs15crproperty 
Tags:    

Similar News