செய்திகள்

மன்மோகன் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2018-05-31 10:26 GMT   |   Update On 2018-05-31 10:38 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பாஜக அரசு குறைத்தது. இதனால் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அசுத்தமான அரசியல் செய்வதாக சாடினார். மேலும், 22 வருடங்களாக அரியானாவில் இருந்து அளிக்கப்படும் நீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருகிறார்கள். பிரதமர்கள் கல்வியறிவுடன் இருக்க வேண்டும். அது மக்களின் வாழ்க்கை மலர்ச்சிக்கு உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மோடியின் கல்வித்தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. #educatedPM #ArvindKejriwal #Manmohansingh
Tags:    

Similar News