செய்திகள்

ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் பீதியில் பிச்சைக்காரர் அடித்து கொலை

Published On 2018-05-28 06:47 GMT   |   Update On 2018-05-28 06:47 GMT
ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் பிச்சைகாரர் ஒருவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.#ChildAbduction
ஐதராபாத்:

குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக ஏற்பட்ட பீதியில் தமிழ்நாட்டில் சில அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்டனர். இங்கு அமைதி நிலவிய நிலையில் தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குழந்தை கடத்தல் பீதி பரவிவருகிறது.

இதனால் அங்கு சந்தேகப்படும் நிலையில் நடமாடும் நபர்களை பொதுமக்களே பிடித்து தாக்குதல் நடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இதுபோன்று கடந்த 13 நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் அடித்து கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் சந்திரய்யா (52) மெகபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் மேலும் 3 பிச்சைக்காரர்கள் சுவானி, நரசிம்மா மற்றும் ரவி ஆகியோருடன் ஐதராபாத்தின் மையபகுதியான சந்திராங்குட்டா பகுதியில் நள்ளிரவில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் அரவாணி உடையில் இருந்தனர்.

இதற்கிடையே, மெகபூப் நகர் பகுதியில் இது போன்று உடை அணிந்திருந்த 2பேர் ரோட்டோரோம் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்தனர். அப்போது ‌ஷகிலா பாத் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈருபட்டதாக ‘வாட்ஸ் அப்’பில் வந்த தகவல் அடிப்படையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இத்தகவல் ‘வாட்ஸ் அப்’பில் பரவியதை தொடர்ந்து சந்திராயங்குட்டா பழைய நகர் பகுதியில் தங்கியிருந்த சந்திரய்யா உள்ளிட்ட 4 பேரை கும்பலாக பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிச்சைக்காரர்களை தாக்கிய கும்பலை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். 2 போலீஸ் வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே அக்கும்பல் அங்கு கட்டுமான பணிக்காக வைத்திருந்த கான்கிரீட் பலகைகளால் பிச்சைக்காரர்கள் மீது தாக்கினர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரய்யா மற்றும் சுவாமி ஆகியோரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரய்யா பரிதாபமாக இறந்தார். சுவாமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 25 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChildAbduction
Tags:    

Similar News