இந்திய எல்லையில் இருந்து 200 பாக்., டிரோன்கள்- 287 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
- 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
- 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சமீப காலமாக அடிக்கடி எல்லை தாண்டி வரும் டிரோன்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானையொட்டி உள்ள மாநிலங்களின் 553 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
எல்லைப்பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடத்தல் காரர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தரை மற்றும் வான்வழி மூலம் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்த 200 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எல்லைப்பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் 16 பாகிஸ்தானியர்கள் உள்பட 219 கடத்தல்காரர்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 287 கிலோ ஹெராயின், 13 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள்,174 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கும் அதிகமான உயர் ரக வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபட்ட 203 இந்திய கடத்தல் காரர்கள் மற்றும் 16 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் காரர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு (2024) 294 டிரோன்கள் மற்றும் 294 கிலோ போதைப்பொருட்கள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 30 பாகிஸ்தானியர்கள் உள்பட 191 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு கடத்தல் காரர்களின் கைது எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.