செய்திகள்

அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - பிரேமலதா

Published On 2019-03-31 08:59 GMT   |   Update On 2019-03-31 08:59 GMT
அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இக்கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலினும், மற்ற கட்சிகளும் பயந்துவிட்டன.

இக்கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. பெண்களின் நலன் காக்க இக்கூட்டணி பாடுபடும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு இந்த கூட்டணி தடுக்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவிடாமல் எங்களை தடுக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயன்று தோற்றுப்போய் விட்டன. துரோகிகளின் புகலிடம் தி.மு.க.

தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த வெற்றிக்கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுபோல தேர்தல் முடிவு நமது வெற்றியை நிரூபிக்கும்.


மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பதவியேற்றவுடன் முதல் வேலையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாடுபடுவோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன்காக்க, ஏழை தொழிலாளர்களின் நலன்காக்க அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். துளசியின் வாசம்கூட மாறலாம். ஆனால் தவசியின் வாக்கு மாறாது.

விலைவாசியை குறைப்போம். தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.2ஆயிரம் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தேடிவரும். எங்கள் வெற்றிக்கூட்டணிக்கு எதிரே உள்ளவர்கள் 2ஜி ஊழல் போன்றவற்றை செய்தவர்கள். 2011-ல் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என இங்கு முதன்முதலாக குற்றம் சாட்டுகிறேன். அதன் பிறகு இறைவனாக பார்த்து இப்போது எங்களை இணைத்து வைத்துள்ளார். இந்த கூட்டணி இனி தொடரும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

Tags:    

Similar News