செய்திகள்

11, 12-ந்தேதிகளில் நேர்காணல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 13-ந்தேதி வெளியிட திட்டம்

Published On 2019-03-09 13:00 IST   |   Update On 2019-03-09 13:00:00 IST
அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் வேட்பாளர் பட்டியலை 13-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். #admk #parliamentelection

சென்னை:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளை இந்த கூட்டணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதன் பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்கின்றனர்.

அதன் பிறகு 13-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே எம்.பி.யாக உள்ளவர்களில் யார்- யாருக்கு ‘சீட்’ கிடைக்கும், யாருக்கெல்லாம் ‘சீட்’ இல்லை என்பது அப்போது தெரியவரும்.

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்ட நிலையில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.

21 சட்டசபை தொகுதிகளுக்கு இன்றும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.

இதன் பிறகு தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #admk #parliamentelection

Tags:    

Similar News