உள்ளூர் செய்திகள்

கோவை பீளமேட்டில் சம்பள பாக்கி கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Published On 2023-10-08 08:50 GMT   |   Update On 2023-10-08 08:50 GMT
  • தனியார் நிறுவனத்தில் பெண்மணிக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
  • தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

பீளமேடு,

கோவை பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டை சேர்ந்த 40 வயது பெண்மணி, பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

நான் அந்த நிறுவனத்தில் கடந்த 2021 ஆகஸ்டு மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை வேலை பார்த்தேன். இந்த நிலையில் அவர்கள் எனக்கு கடைசி 4 மாதங்கள் சம்பளம் தரவில்லை.

எனவே நான் அந்த நிறுவன மேலாளர்கள் சுதாகர், சின்னகாளை ஆகியோரிடம் நிலுவையில் உள்ள சம்பளப்பாக்கியை வழங்கும்படி கேட்டேன். அப்போது அவர்கள் பாலியல் உல்லாசத்துக்கு இணங்கினால்தான் சம்பளப் பாக்கி தருவோம் என்று மிரட்டினர். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் என்னை தகாத வார்த்தைகள் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

எனவே போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர்கள் சுதாகர் மற்றும் சின்ன காளை ஆகிய 2 பேருக்கும் எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News