உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி

Published On 2022-12-04 08:35 GMT   |   Update On 2022-12-04 08:35 GMT
  • கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
  • காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம், கூடலூா் பாடந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணி (56). இவா் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றாா்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானாா். தகவலின்பேரில் புளியம்பாறை பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதேபோல கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் கடந்த நவம்பா் 19 ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து தேவாலா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை தாக்கிய பிஎம் 2 அரிசி ராஜா என்கிற காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கூடலூா் பாடந்துறை கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணியைத் தாக்கி கொன்றது ஏற்கெனவே தேடப்பட்டு வரும் பி.எம் 2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News