உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2023-07-07 07:48 GMT   |   Update On 2023-07-07 07:48 GMT
  • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
  • மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட்-க்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.26.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இ.குமாரலிங்கம் மற்றும் மேட்டமலை ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு, வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும்,மேட்டமலை நடுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவர் விடுதியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாணவர்களின் எண்ணிக்கை, வழங்கப் படும் உணவுகளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவி களுடன் கலந்துரையாடி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள், உதவித்தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவதற்கான துறைகள் மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News