உள்ளூர் செய்திகள்

வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலி

Published On 2023-06-08 08:03 GMT   |   Update On 2023-06-08 08:03 GMT
  • விருதுநகர் அருகே வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
  • நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார. இவரது மகன் கனகவேல் (18). இவர் உறவினர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

வாலிபர் பலி

ஏ.ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கனகவேலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் எம்.துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது50). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கடைகளுக்கு சென்று மிக்சர் பாக்கெட் விநியோகம் செய்வார். இந்த நிலையில் சைக்கிளில் சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (68). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

Similar News