10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
- 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் உள்ள நூற்பாலையில் கேரள மாநிலம் கேனல் இடுக்கி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரும் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.
ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்று விட வீட்டில் தனியாக இருந்த மாணவி கிருஷ்ணமூர்த்தியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பின் 2 பேரும் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அப்போது மாணவிக்கு கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்.