கழிவு, மழை நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
- உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- அதிகாரிகளுடன் ஆலோசனை
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி 2-வது வார்டு 4-வது புது ஆலியார் தெருவில் மழைக்காலங்களில் ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும், கழிவுநீரும் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கழிவு நீரும், மழை நீரும் தேங்கி வெளியேற பல நாட்கள் ஆகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கடராமன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த கழிவு நீரும் மழை நீரும் செல்ல தேவையான வழிகளை ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர் அன்வர், கள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணை தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.