உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தை பிரமுகர் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-06-29 14:43 IST   |   Update On 2023-06-29 14:43:00 IST
  • பெண்ணை தாக்கியதாக கைது
  • நள்ளிரவு போராட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு

வேலூர்:

வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா. கடந்த 26 -ந் தேதி இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது அப்போது எதிர் வீட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் கணவன் மனைவி இருவரையும் கண்டித்து உள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் சக்திவேலை, வெங்கடேசன் தம்பதியினர் திட்டி உள்ளனர். இதுகுறித்து சக்திவேல் தான் கார் டிரைவராக வேலை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தனிடம் கூறினார். கோவேந்தன் துர்காவை திட்டி தாக்கியதாக பாகாயம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் கோவேந்தனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை ஆஜர்படுத்துவதற்காக வேலூர் அண்ணா சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணா சாலையில் குவிந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும்போது மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனால் நள்ளிரவில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைதான கோட்டி என்கிற கோவேந்தனை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News