வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெற்றி தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று காலை 2ம் கால யாகபூஜையும், மாலை 3ம் கால யாகபூஜை, யந்திர ஸ்தாபனம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நாளை காலை 4.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, பூர்ணஹூதி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மஹா அபிஷேகம், குருநாதர் அருளாசி, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சுக்காம்பட்டி சாமிகள், சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.