ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.
- குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்து உள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு மலைபாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமாக செல்லும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்லாமல், அயோத்தியாபட்டணம் அருளே உள்ள குப்பனூர் வழியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்று கிழமை என்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களில் ஏற்காடு வந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மலை பாதையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுபோல ஏற்காடு ரவுண்டானா மற்றும் படகு இல்லம், பஸ் நிலைய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.