உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு

Published On 2022-09-12 15:06 IST   |   Update On 2022-09-12 15:08:00 IST
  • விவசாய நிலத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
  • கொலை செய்யப்பட்டாரா?- போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் அருகே உள்ள உண்ணாமலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஆனந்தன் (வயது 42) இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

உண்ணாமலை பாளையத்திற்கு விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்திற்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது நிலத்தின் அருகே மற்றொருவரின் விவசாய நிலத்தில் உள்ள தொட்டியின் அருகில் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது கால், உடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் இருந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆனந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் மர்மம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த ஆனந்தனுக்கு சாந்தி (30) என்ற மனைவியும் சுபாஷ் (15) என்ற மகனும் லட்சுமி (11), அனுப்பிரியா (வயது 4) என்ற மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News