உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்த காட்சி.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Published On 2022-08-22 14:53 IST   |   Update On 2022-08-22 14:53:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
  • ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது திருவண்ணாமலையில் முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.

வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி அருகில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது பாட்டில்கள் வீசப்பட்டு கலவரம் ஏற்பட்டது.

அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சிலை சந்திப்பு பகுதி, அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கடந்த 2018-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்ட சமுத்திரம் காலனி அருகில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் பார்வையிட்டார். அந்த பகுதியில் இந்த ஆண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து அவர் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் தாமரை குளம் வரை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News