பல்லடம் பஸ் நிலையம் அருகே எரியாத உயர் மின் கோபுர விளக்கு விபத்து அபாயம்
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது
- பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து தற்போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.