உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குவிந்த மாணவிகளின் பெற்றோர். மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்ட காட்சி. கைகுலுக்கி மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தை. திருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் இறைவணக்கத்தில் பங்கேற்ற மாணவர்கள்.

பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் - ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

Published On 2023-06-12 08:06 GMT   |   Update On 2023-06-12 08:06 GMT
  • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
  • பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (இன்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை மறுதினம்) பள்ள–கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கல்வித்துறையின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் இன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

2 மாத விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் கைகுலுக்கியும் வரவேற்றனர்.

ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. கல்வியின் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு உணர்த்தி அவர்களின் கல்வியை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் ,காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர். விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வந்தனர். அவர்களை பெற்றோர்கள் பள்ளியில் விட்டு விட்டு வீடுகளுக்கு சென்றனர்.

Tags:    

Similar News