சோயா உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
- மக்காச்சோளம் மற்றும் சோயா புண்ணாக்கு ஆகியவை கறிக்கோழிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
- தமிழகத்துக்கு ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் சோயா புண்ணாக்கு தேவை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பிபிசி.,) சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டில் கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழக முதல் இடத்தில் உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் 50 சதவீத மக்காச்சோளம் மற்றும் 40 சதவீத சோயா புண்ணாக்கு ஆகியவை கறிக்கோழிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
பல்லடம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் கறிக்கோழிகளும் நாமக்கல், சேலம் பகுதிகளில் முட்டைகளும் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. இவற்றுக்கு அதிக அளவில் சோயா புண்ணாக்கு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் சோயா புண்ணாக்கு தேவை. இவை, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்தே பெறப்படுகின்றன.
விவசாயிகளுக்கு மானியம் அளித்து சோயா உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஐ.எஸ்.ஆர்., உடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து சோயா புண்ணாக்கு குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.அதிக உற்பத்தி தரும் சோயா புண்ணாக்குகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.