கோப்புபடம்.
தாராபுரம் அருகே அண்ணன்-தம்பியை கத்தியால் குத்திய 3பேர் கைது
- சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பி உள்பட 3பேரை தேடி வந்தனர்.
- தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சின்னக்காம்பாளையம். இப்பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 55) மற்றும் மதிவாணன் (57) ஆகிய இருவரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் சக்திவேல் தனது இடத்தில் இடைவெளி விடாமல் வீடு கட்டியுள்ளார். இவர் தான் கட்டிய வீட்டிற்கு வெள்ளையடிக்க அருகில் வசிக்கும் மதிவாணன் வீட்டு இடத்துக்குள் சென்றதாக தெரிகிறது.
இதனால் சக்திவேலை பார்த்து உனது இடம் முழுவதும் வீடு கட்டி விட்டாய் எதற்கு என் வீட்டு வாசலுக்கு வந்தாய் என மதிவாணன் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் சார்பாக அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் மகன் மதன்குமாரும், அதே போல மதிவாணன் சார்பாக தம்பி ரமேஷ் பாபு சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் சக்திவேல் மகன் மதன்குமார் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்தினார். அதில் சக்திவேல், கருப்புசாமி (58), சக்திவேல் மகன் மதன்குமார் (18) ஆகிய மூவரும் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் 3 பேரை கத்தியால் குத்திய மதிவாணன் மற்றும் அவரது தம்பி ரமேஷ்பாபு , பிரதீபா ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பி உள்பட 3பேரை தேடி வந்தனர். அப்போது 3பேரும் திருப்பூர் கோல்டன் நகர் பாளையக்காடு வடுக்கு பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருந்தனர். அவர்களை போலீசார் நேரில் சென்று கைது செய்தனர்.பின்னர் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.