- தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் -17, திருப்பூர் தெற்கு -26, கலெக்டர் அலுவலகம் -29, மடத்துக்குளம் -3, தாராபுரம்-2, மூலனூர்-1,குண்டடம் -17, உப்பாறு அணை-14, நல்லதங்காள் ஓடை-2, உடுமலைப்பேட்டை- 3.30, அமராவதி-4, திருமூர்த்தி அணை -5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, காங்கயம்-6, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-2, வட்டமலைக்கரை அணை -3, பல்லடம்-29. மாவட்டம் முழுவதும் மொத்தம் 167.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.