உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாயி - வியாபாரி தற்கொலை

Published On 2022-08-18 05:03 GMT   |   Update On 2022-08-18 05:03 GMT
  • சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தாராபுரம் :

காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). திருமணமான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் செல்லமுத்து கடந்த பல வருடங்களாக அதிகளவில் மது குடித்து வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியாமல் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு கொடுவாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் பாப்பையின் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ் (வயது 35). காய்கறி வியாபாரியான இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த சர்மி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷத் (13) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ராஜேஷ் தனது பெற்றோருடன் பாப்பையின் புதூர் பகுதியில் வசித்தபடி வியாபாரத்தை கவனித்து வந்தார். அடிக்கடி மனைவி மற்றும் மகனை நினைத்து சில நேரத்தில் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு தாய் ராணி ஊருக்கு சென்றபோது ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News