கோப்பு படம்.
யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது - வனத்துறையினர் எச்சரிக்கை
- மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன.
- சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
உடுமலை:
உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு வனத்துறை சாா்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது வனப் பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீருக்காக காலை, மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன. இந்நிலையில், அமராவதி வனச்சரகம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லும் யானைகள் மீது கற்களை வீசுவது, செல்பி எடுக்க முயல்வது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, புகைப்படம் எடுப்பதற்காக அருகில் சென்று யானைகளை தொந்தரவு செய்கின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் யானைகளை தொந்தரவு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: -
உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி யானைகளை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எல்லை மீறுபவா்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.