பல்லடம் நகராட்சியில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
- நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
- புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் கட்டப்பட்டுள்ளது. சிமெண்ட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளை அகற்றி விட்டு, ரூ.1.61 கோடி மதிப்பில் 48 கடைகள் கான்கிரீட் மேற்கூறையுடன் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கடைகளை வாடகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாமணி தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாற்று இடம் வழங்கப்படுவதாகவும், புதிய கடைகள் கட்ட ஒத்துழைப்பு வழங்கவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வியாபாரிகள் தரப்பில் கட்டப்படும் புதிய கடைகளில் ஏற்கனவே வாடகைக்கு உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். கட்டப்படும் கடைகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நியாயமான தொகையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.