உள்ளூர் செய்திகள்

நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையார்

அவினாசி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

Published On 2022-07-06 12:17 GMT   |   Update On 2022-07-06 12:17 GMT
  • நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.
  • திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும். காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழா அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று காலை 10 மணி முதல் நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞசாமிர்தம்,பால்,மஞ்சள் உள்ளிட்ட 16 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய, மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜருக்கும்,சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

Tags:    

Similar News