- இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 3-வது வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடி உடன் கரகம் புறப்பட்டு தேர் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.