அ.தி.மு.க.வுக்கு பா.ஜனதா தலைமை இருக்கக்கூடாது- திருமாவளவன் பேட்டி
- அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது.
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆணழகன் சீனிவாசனின் தாயார் படத்திறப்பு மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. பேட்டை ராஜா நகரம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பட்டியலின மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒற்றை, இரட்டை, கூட்டுத் தலைமை ஒருபுறம் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தலைமை இருக்கக்கூடாது. அது அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல குடியரசுத்தலைவர் தேர்தல், அம்பேத்கருக்கும் சங்பரிவர் அமைப்பின் நிறுவனருக்கும் இடையிலான யுத்தம் என நினைக்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பாஜக உடைத்து, எம்.எம்.எல்.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி வருகிறது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பெரும்பான்மையான இந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம், பா.ஜ.க. அரசு, இந்துகளுக்கு விரோதமான அரசு என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் நீல வானத்து நிலவன், பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், தளபதிசுந்தர், அருண் கவுதம், செஞ்சிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.