உள்ளூர் செய்திகள்

தீ குளிக்க முயன்ற முதியவரை படத்தில் காணலாம்.

கடலூரில் வீட்டுக்கு சீல் வைக்க வந்தனர்: அதிகாரிகளை கண்டித்து தீ குளிக்க முயன்ற முதியவர்

Published On 2022-08-11 08:24 GMT   |   Update On 2022-08-11 08:24 GMT
  • கடலூரில் வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து முதியவர் தீ குளிக்க முயன்றார்.
  • சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டினை சுந்தரேசன் (வயது 65) என்பவர் பயன்படுத்தி வருகிறார். இந்த வீட்டுக்கு வாடகை பாக்கியாக ரூ. 5 லட்சத்து 21 ஆயிரம் உள்ளது. இதனை கட்டாமல் இருந்ததால் அந்த வீட்டை காலி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரன் தலைமையில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் ராஜாம்பால் நகருக்கு சென்றனர். அப்போது சுந்தரேசன் வசித்து வந்த வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தரேசன் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உஷாரான போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் சுந்தரேசனிடம் கூறுகையில், கோர்ட்டு உத்தரவு படிதான் நாங்கள் சீல் வைக்க வந்துள்ளோம். எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதற்கு சுந்தரேசன் கால அவகாசம் கேட்டார். உடனே அதிகாரிகள் அதற்குள் வாடகை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கும் சுந்தரேசன் கால அவகாசம் கேட்டதால் மறுத்த அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News