விபத்தில் காயம் அடைந்தவர்களை தனது காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய துணை மேயர்
- காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.
- நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நான்கு பேர் காயமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக காரை நிறுத்துமாறு கூறினார்.
பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு தனது காரில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். காயமடைந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் அஞ்சுகம்பூபதி செயலை பொதுமக்கள் பாராட்டினர்.