உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை

Published On 2024-05-27 09:38 GMT   |   Update On 2024-05-27 09:38 GMT
  • மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்னேரி பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தபோது டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்துள்ளது.

அதை பார்த்தவர்கள் இது குறித்து டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த துரைசாமி இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடைக்குள் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News