உள்ளூர் செய்திகள்

மனைவி புகார் அளித்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

Published On 2022-07-05 04:59 GMT   |   Update On 2022-07-05 04:59 GMT
  • அரக்கோணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் குறைதீர்வு சிறப்பு முகாம் நடத்தினர்.
  • இதில் அரக்கோணம் பகுதியிலுள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பாராஞ்சி ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தளபதி (வயது32). இவரது மனைவி மீனா காயத்ரி. இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தளபதி வீட்டிற்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மீனா காயத்ரி புகார் மனு ஒன்று அளித்தார். அதில் தனது கணவர் தளபதி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரக்கோணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் குறைதீர்வு சிறப்பு முகாம் நடத்தினர். இதில் அரக்கோணம் பகுதியிலுள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மீனா காயத்ரி கொடுத்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் தளபதியை தொடர்பு கொண்டு அவரை விசாரணைக்கு அழைத்தனர். மனைவி புகாரால் விசாரணைக்கு அழைத்ததால் தளபதி மனம் உடைந்தார். பூச்சி மருந்து குடித்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு சென்றார்.

போலீசார் அவரிடம் விசாரித்த போது பூச்சி மருந்து வாடை வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் இதை பற்றி கேட்டபோது அவர் பூச்சி மருந்து குடுத்து விட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக அவரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தளபதி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி புகாரால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News