உள்ளூர் செய்திகள்

கோவை அருகே மனநலம் பாதித்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்

Published On 2023-09-05 04:56 GMT   |   Update On 2023-09-05 04:56 GMT
  • சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கோவை:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இளம்பெண்ணை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த மாதம் 27-ந்தேதி திடீரென இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் நைசாக பேசி ஈச்சனாரியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 3 வாலிபர்களும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு தப்பிச் சென்றனர்.

இளம்பெண் படுகாயத்துடன், அரைகுறை ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளம்பெண்ணை மீட்டு கிணத்துக்கடவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. அந்த வாலிபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News