உள்ளூர் செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்த பசுவராஜ்.


மசினகுடி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

Published On 2022-06-19 13:59 IST   |   Update On 2022-06-19 13:59:00 IST
  • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
  • சில சமயங்களில் மனித-விலங்கு மோதலும் நடைபெற்று வருகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித-விலங்கு மோதலும் நடைபெற்று வருகிறது.

தெங்குமரஹடா புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (வயது42). தொழிலாளி. இவர் நேற்று இரவு மசினகுடி அடுத்த பொக்காபுரத்தில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு வந்தார்.

வரும் வழியில் புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை திடீரென வழிமறித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விரட்டி சென்று அவரை தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பசுவராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

பின்னர் பொதுமக்கள் ஒன்று கூடி யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து பசுவராஜ் அருகே சென்று அவரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பசுவராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News