உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்ற அழகு நிலைய பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்

Published On 2023-10-27 04:28 GMT   |   Update On 2023-10-27 04:28 GMT
  • இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
  • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். அழகு கலை நிபுணர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இளம்பெண் குன்னூர் கம்பி சோலையில் வசித்த போது அவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பெயிண்டர் கருணாகரன் (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் கருணாகரனுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

இளம்பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் இங்கேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று இளம்பெண் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கருணாகரன் குடிபோதையில் வந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் முகத்தில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கருணாகரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கருணாகரனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News