உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே தையல் கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-08-04 07:10 GMT   |   Update On 2022-08-04 07:10 GMT
  • ரோகினி வசந்தி கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
  • திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோகினி வசந்தி (வயது 40). திருவள்ளூர் ராஜாஜி புரத்தில் தையல் கடை வைத்து உள்ளார்.

இவர் கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

இதன் காரணமாக கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ரோகினி வசந்தி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ரோகிணி வசந்தி தனது தையல் கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கடைக்குள் புகுந்து ரோகிணி வசந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரோகிணி வசந்தியை சரமாரியாக வெட்டினர்.

இதனை தடுக்க முயன்ற கடை ஊழியர் பாபு என்பவரையும் அவர்கள் மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகிணி வசந்தி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News