ரூ.2 லட்சம் கடன் தகராறில் பெண் தற்கொலை- தகாத வார்த்தையால் திட்டிய பெண் கைது
- திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.
- திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர்.
திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி பவானி (வயது35). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.
ஆனால் பவானியால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் விஜயலட்சுமி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
மேலும் கடந்த வாரத்தில் பணத்தை திருப்பி கேட்டு விஜயலட்சுமி தகாத வார்த்தைகளால் பவானியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பவானி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.